Skip to main content

'12 லட்சியம்... 6 நிச்சயம்' மராட்டியத்தை தொடர்ந்து களேபரத்துக்கு தயாராகும் கர்நாடகா..?

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

கர்நாடக மாநிலத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலத்தின் 15 தொகுதிகளுக்கு சில தினங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக குறைந்தபட்சம் 6 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும். அந்தவகையில், பாஜக கட்சியை பொறுத்தவரை இந்தத் தேர்தல் ஒரு வாழ்வா சாவா போராட்டம் என்றாலும் மிகையில்லை.அதேசமயம், எதிர்கட்சிகளும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. காலியான தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் கர்நாடகத்தின் அரசியல் களம் பரபரப்பாகவே இருந்து வருகிறது.



இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் மொத்தம் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக,தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  வாக்கு எண்ணிக்கை, டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. 15 தொகுதிகளுக்கு நடைபெற்றுள்ள தேர்தலில், மாநிலத்தில் ஆளும் பாஜக, ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ் 3, மஜத எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குப்பதிவு சதவீத குளறுபடி குறித்து சத்யபிரதா சாகு விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Sathyaprada Sahu explained about the polling percentage error

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று (21.04.2024) அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதாவது, திருவள்ளூர் - 68.59 %, வட சென்னை - 60.11 %, தென் சென்னை - 54.17 %, மத்திய சென்னை - 53.96 %, ஸ்ரீபெரும்புதூர் - 60.25 %, காஞ்சிபுரம் - 71.68 %, அரக்கோணம் -74.19 %, வேலூர் - 73.53 %, கிருஷ்ணகிரி - 71.50, தருமபுரி - 81.20 %, திருவண்ணாமலை - 74.24 %, ஆரணி - 75.26 %, விழுப்புரம் - 76.52 %, கள்ளக்குறிச்சி - 79.21 %, சேலம் - 78.16 %, நாமக்கல் - 78.21 %, ஈரோடு - 70.59 %, திருப்பூர் - 70.62 %, நீலகிரி - 70.95 %, கோயம்புத்தூர் - 64.89 %, பொள்ளாச்சி - 70.41 %, திண்டுக்கல் - 71.14 %, கரூர் - 78.70 %, திருச்சிராப்பள்ளி - 67.51 %, பெரம்பலூர் - 77.43 %, கடலூர் - 72.57 %, சிதம்பரம் - 76.37%, மயிலாடுதுறை - 70.09 %, நாகப்பட்டினம் - 71.94 %, தஞ்சாவூர் - 68.27 %, சிவகங்கை - 64.26 %, மதுரை - 62.04 %, தேனி - 69.84 %,விருதுநகர் - 70.22 %, ராமநாதபுரம் - 68.19 %, தூத்துக்குடி - 66.88 %, தென்காசி - 67.65 %, திருநெல்வேலி - 64.10 % மற்றும் கன்னியாகுமரி - 65.44 % பதிவாகியுள்ளன. 

Sathyaprada Sahu explained about the polling percentage error

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு சதவீத குளறுபடி குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார். அதில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் (APP) கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டது. இந்த செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தை வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வாக்கு சதவீதத்தை ஒருசிலர் மட்டுமே செயலியில் பதிவிட்டதால் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்திட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம். இதனால் சில குளறுபடிகள் ஏற்பட்டன” எனத் தெரிவித்தார்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து பேசுகையில், “வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து கடந்த அக்டோபர் மாதமே அரசியல் கட்சிகளுக்கு தகவல் தரப்பட்டது. வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக கேஸ் பை கேஸ் (Case by Case) விசாரணை நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் தொடர்பாக வாராவாரம் அரசியல் கட்சிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, சரிபார்க்க பல்வேறு வாய்ப்புகள் வாக்களர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வாக்காளர் நீண்ட காலமாக அவரது முகவரியில் இல்லாவிட்டால் பட்டியலில் பெயர் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை செல்லுபடியாகும். புதிய வாக்காளர் அட்டைதான் தேவையென்று இல்லை” என விளக்கமளித்துள்ளார். 

Next Story

பலத்த பாதுகாப்புடன் மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Re-polling in Manipur with tight security

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இத்தகைய சூழலில் இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதன்படி வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம், வாக்காளர்கள் மிரட்டல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்கள்  நிகழ்ந்தன. 

Re-polling in Manipur with tight security

இதனையடுத்து 47 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 11 வாக்குப்பதிவு மையங்களில் ஏற்பட்ட தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் காரணமாக வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டிருந்தது. மேலும் இன்று (22.04.2024) மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மணிப்பூரின் இன்னர் மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.