/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2023-08-11 at 4.29.59 PM_11.jpeg)
பட்டியலின பெண் ஒருவரை நிர்வாணமாக்கி, பின்னர் வலுக்கட்டாயமாக வாயில் சிறுநீர் கழித்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் உள்ள மோசிம்பூர் கிராமத்தில் பட்டியலின பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பிரமோத் சிங் என்பவரிடம் ரூ.1500 கடனாக பெற்றுள்ளார். அந்த ரூபாய்க்கான வட்டியைச் சேர்த்து செலுத்துமாறு பிரமோத் சிங், அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு, அந்த பெண், அந்த 1,500 ரூபாயும், அதற்கான வட்டியையும் பிரமோத் சிங்கிடம் கொடுத்துள்ளார். இருப்பினும், சம்பவம் நடந்த அன்று (23-09-23) இரவு பிரமோத் சிங், அவரது மகன் அன்ஷூ மற்றும் நான்கு கூட்டாளிகள் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும், அவர்கள் அங்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, அவர்கள் அந்த பெண்ணிடம் அந்த ரூபாய்க்கு மீறி கூடுதல் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண், கூடுதல் பணத்தை தர முடியாது என்று மறுத்துள்ளார். இதனையடுத்து, பணம் கொடுக்கவில்லை என்றால், அந்த பெண்ணை நிர்வாணமாக ஊர் சுற்றி வர வைப்போம் என்று பிரமோத் சிங் அந்த பெண்ணிடம் மிரட்டியுள்ளார். இதையடுத்து அவர்கள் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர், அந்த பெண்ணை நிர்வாணமாக்கி தடிகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், பிரமோத் சிங்கின் மகன் அன்ஷூ அந்த பெண்ணின் வாயில் சிறுநீர் கழித்துள்ளார். அதன் பின்னர், அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, தனக்கு நேர்ந்த கொடுமையை தனது குடும்பத்தினரிடம் கூறிய அந்த பெண், உள்ளூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருக்கின்ற பிரமோத் சிங்கையும், அவரது மகனையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல அரசியல் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
Follow Us