Bridge collapses in Pune, two persons lost their life

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தலேகானில் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திராணி ஆறும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சுற்றலாத் தளம் ஒன்றில் கட்டப்பட்ட 60 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. இதில் 20க்கும் மேற்பட்டோர் இந்திராணி ஆற்றில் இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

100க்கும் அதிகமான சுற்றலா பயணிகள் அங்கிருந்த போது யாரும் எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக புனே மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது 20க்கும் அதிகமானோர் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஆற்றில் அதிக அளவிலான நீர்வரத்து மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இருப்பினும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் என்.டி.ஆர்.எப். வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு புறம் அங்கிருந்த பொதுமக்களைப் பத்திரமாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதோடு அவசர தேவைக்கு மருத்துவ ஆம்புலன்ஸ்கள் மற்றும் முதலுதவிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாலம் இடிந்து விழுந்த இடத்திற்கு மகாராஷ்டிரா அமைச்சர் கிரிஷ் மகாஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.