
ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள ராமகிருஷ்ணா காலனியைச் சேர்ந்தவர் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதான திவ்யா, பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 3ம் தேதி மாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற திவ்யா, அன்றைய தினம் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன அவரது பெற்றோர் தங்களுடைய மகளை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், எங்கும் தேடியும் திவ்யா கிடைக்காததால், அடுத்தநாள் காலை இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன திவ்யா குறித்து பல்வேறு கோணங்களில் துப்பு துலக்கி வந்தனர். ஆனால், போலீசார் விசாரணையை தொடங்கி 4 நாட்கள் ஆகியும் திவ்யா குறித்த சிறிய தகவல் கூட கிடைக்கவில்லை.
இந்த சூழலில், கடந்த 7ம் தேதி இரவு கோட்கூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முட்புதர் பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் பாதி எரிந்த நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்த அவ்வழியாக சென்ற ஆடு மேய்ப்பவர்கள், இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அனந்தபுரம் போலீசார்.. திவ்யாவின் பெற்றோருடன் ஸ்பாட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது, அந்த சடலத்தின் கையில் டாட்டூ அடையாளத்தை வைத்து, இறந்தது தங்கள் மகள் தான் என்பதை உறுதி செய்தனர். பள்ளி மாணவியின் கொலை, அனந்தபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை குற்றவாளிகளை தீவிர வேட்டையில் இறங்கினர். அதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திவ்யாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது தெரியவந்தது. . இதையடுத்து, நரேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.
அனந்தபுரம் நகரைச் சேர்ந்த நரேஷ், திவ்யாவின் பெற்றோருக்கு சொந்தமான புதிய வீட்டுக்கு ஃபோர்மேன் வேலைக்காக வந்துள்ளார். அப்போது, நரேஷுக்கும் திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் ஒருகட்டத்தில் நெருக்கமாகி இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். ஆனால், நரேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், திவ்யா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். ஏற்கனவே திருமணம் ஆனதால் மீண்டும் திருமணம் செய்யமுடியாது என நரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தன்னையும் திருமணம் செய்ய வேண்டும் என்று திவ்யா வற்புறுத்தத் தொடங்கியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் திவ்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நரேஷ், சம்பவத்தன்று திவ்யாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பைக்கை நிறுத்திய நரேஷ், திவ்யாவை சரமாரியாக தாக்க தொடங்கியிருக்கிறார். அதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தவுடன், அங்கிருந்த பெரிய கல்லை தூக்கி திவ்யா தலையில் போட்டுள்ளார். வலி தாங்க முடியாமல் திவ்யா கதறி துடித்தபோது, நரேஷ் தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் அப்பெண்ணின் வயிற்றில் சொருகி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன்பிறகு, இந்த கொலையை மறைக்க திவ்யாவை பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நரேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணத்திற்கு வற்புறுத்திய மாணவியை, காதலனே கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம், ஆந்திராவை கதிகலங்க வைத்திருக்கிறது.