Skip to main content

"நான் உயிரோடுதான் இருக்கிறேன்" - பாஜக வெளியிட்ட வீடியோவால் பதறிய பத்திரிகையாளர்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

india today journalist

 

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், கடந்த 2ஆம் தேதி வெளியானது. இதில், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. அதேநேரத்தில், தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அங்கு வன்முறையும் வெடித்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநரிடம் கேட்டறிந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகமும், வன்முறை குறித்து மேற்கு வங்க ஆளுநரிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்த வன்முறைக்கு பாஜகவே காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ள மம்தா, தேர்தலுக்குப் பிறகான வன்முறையில் இதுவரை 16 பேர் இறந்துள்ளதாகவும், அதில் பாதி பேர் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்தவர்களென்றும், பாதி பேர் பாஜகவையும், ஒருவர் சஞ்சுக்தா மோர்ச்சாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வன்முறையில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எந்தவிதப் பாரபட்சமுமின்றி 2 லட்சம் இழப்பீடு தரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

 

இந்தநிலையில், மேற்குவங்க பாஜக தனது சமூகவலைதளப் பக்கத்தில், மேற்குவங்கத்தில் நடைபெறும் கலவரம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வன்முறையில் இறந்தவர்கள் என ஒன்பது பேரின் புகைப்படம் பெயரோடு இடம்பெற்றிருந்தது. அதில், ஒருவர் மோனிக் மொய்ட்ரோ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மோனிக் மொய்ட்ரோ என்ற பெயரில் இறந்ததாகக் கூறப்பட்டவர், "இந்தியா டுடே" ஊடகத்தில் பணிபுரியும் அப்ரோ பானர்ஜி என்பவருடையதாகும். 

 

 

தான் இறந்ததாகப் பரவிய வீடியோவைக் கண்டு அதிர்ந்த அவர், தான் உயிரோடு இருப்பதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் விளக்கமளித்ததோடு, அந்தப் பதிவை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் ஊடகத்திடம் இதுகுறித்துப் பேசிய அவர், "நான் இன்று காலை சற்று தாமதமாகத்தான் எழுந்தேன். எழுந்ததும் 100 க்கும் மேற்பட்ட மிஸ்டு கால்களை பார்த்தேன். என்ன நடந்தது என விசாரிக்கும் முன்பே எனது நண்பர் அரவிந்த், பி.ஜே.பி ஐ.டி செல், சிதல்குச்சி வன்முறையில் இறந்துவிட்டதாகக் கூறப்படும் மானிக் மொய்ட்ரோவின் படத்திற்குப் பதிலாக எனது படத்தைப் பரப்புவதாகக் கூறினார். நான் சிதல்குச்சியில் இருந்து 1,400 மீட்டர் தொலைவில் உள்ளேன். இதுபோன்ற தவறான செய்திகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன" எனத் தெரிவித்தார்.

 

இதனையடுத்து பாஜக அந்த விடீயோவை நீக்கியுள்ளது. மேலும் அப்ரோ பானர்ஜியின் ஒரு கட்டுரையை, ஆதாரமாகப் பயன்படுத்துகையில் அவரது புகைப்படம் வீடியோவில் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.