Skip to main content

"நான் உயிரோடுதான் இருக்கிறேன்" - பாஜக வெளியிட்ட வீடியோவால் பதறிய பத்திரிகையாளர்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

india today journalist

 

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், கடந்த 2ஆம் தேதி வெளியானது. இதில், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. அதேநேரத்தில், தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அங்கு வன்முறையும் வெடித்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநரிடம் கேட்டறிந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகமும், வன்முறை குறித்து மேற்கு வங்க ஆளுநரிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்த வன்முறைக்கு பாஜகவே காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ள மம்தா, தேர்தலுக்குப் பிறகான வன்முறையில் இதுவரை 16 பேர் இறந்துள்ளதாகவும், அதில் பாதி பேர் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்தவர்களென்றும், பாதி பேர் பாஜகவையும், ஒருவர் சஞ்சுக்தா மோர்ச்சாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வன்முறையில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எந்தவிதப் பாரபட்சமுமின்றி 2 லட்சம் இழப்பீடு தரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

 

இந்தநிலையில், மேற்குவங்க பாஜக தனது சமூகவலைதளப் பக்கத்தில், மேற்குவங்கத்தில் நடைபெறும் கலவரம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வன்முறையில் இறந்தவர்கள் என ஒன்பது பேரின் புகைப்படம் பெயரோடு இடம்பெற்றிருந்தது. அதில், ஒருவர் மோனிக் மொய்ட்ரோ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மோனிக் மொய்ட்ரோ என்ற பெயரில் இறந்ததாகக் கூறப்பட்டவர், "இந்தியா டுடே" ஊடகத்தில் பணிபுரியும் அப்ரோ பானர்ஜி என்பவருடையதாகும். 

 

 

தான் இறந்ததாகப் பரவிய வீடியோவைக் கண்டு அதிர்ந்த அவர், தான் உயிரோடு இருப்பதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் விளக்கமளித்ததோடு, அந்தப் பதிவை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் ஊடகத்திடம் இதுகுறித்துப் பேசிய அவர், "நான் இன்று காலை சற்று தாமதமாகத்தான் எழுந்தேன். எழுந்ததும் 100 க்கும் மேற்பட்ட மிஸ்டு கால்களை பார்த்தேன். என்ன நடந்தது என விசாரிக்கும் முன்பே எனது நண்பர் அரவிந்த், பி.ஜே.பி ஐ.டி செல், சிதல்குச்சி வன்முறையில் இறந்துவிட்டதாகக் கூறப்படும் மானிக் மொய்ட்ரோவின் படத்திற்குப் பதிலாக எனது படத்தைப் பரப்புவதாகக் கூறினார். நான் சிதல்குச்சியில் இருந்து 1,400 மீட்டர் தொலைவில் உள்ளேன். இதுபோன்ற தவறான செய்திகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன" எனத் தெரிவித்தார்.

 

இதனையடுத்து பாஜக அந்த விடீயோவை நீக்கியுள்ளது. மேலும் அப்ரோ பானர்ஜியின் ஒரு கட்டுரையை, ஆதாரமாகப் பயன்படுத்துகையில் அவரது புகைப்படம் வீடியோவில் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.