நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் தொடர் அமளி!

BJP MLAs Continually Amali in Jammu and Kashmir Assembly

ஜம்மு காஷ்மீரில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்படி, அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கக்கூடிய உமர் அப்துல்லா முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

இந்த சூழலில், 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் முதல் கூட்டத்தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான அப்துல் ரஹீம் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, சட்டசபையில் நேற்று மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ வஹீத் பாரா, ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். இதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று முழுவதும் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பா.ஜ.க தொடர் அமளியில் ஈடுபட்டதால் 15 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர், அவை கூடியபோது மீண்டும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்
Subscribe