இதில், ஜே.பி. நட்டா, சோனியா காந்தி உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 இடங்களிலும், கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களில் இன்று (27-02-24) தேர்தல் நடைபெற்றது. இதில் கர்நாடகா மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 3 பேரும், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தலா ஒருவரும் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், பெங்களூர் யஷ்வந்தபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ எஸ்.டி சோமசேகர், கட்சி மாறி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. எஸ்.டி. சோமசேகர், காங்கிரஸுக்கு வாக்களித்ததை பா.ஜ.க தலைமை கொறடாவான தோடண்ண கவுடா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், கட்சி மாறி வாக்களித்ததற்கு சோமசேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க கொறடா அறிவித்துள்ளது.
இது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ எஸ்.டி. சோமசேகர் கூறுகையில், “வாக்குறுதியை உறுதியளித்தவர்களுக்கு வாக்களித்துள்ளேன். தனது தொகுதிக்கு நிதி ஒதுக்க உறுதி தரும் எம்.பி.யை தேர்வு செய்ய ஆதரவு தருவேன்” என்று கூறியுள்ளார். அதே வேளையில், எஸ்.டி. சோமசேகர் தவிர மேலும் சில பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களும் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.