Skip to main content

"எம்.எல்.ஏ மனைவிக்கே இந்த நிலையென்றால்" - பாஜக எம்.எல்.ஏவின் அதிர்ச்சி குற்றச்சாட்டு! 

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

up bjp mla
                                                                       FILE PIC

 

இந்தியாவில் கரோனா பரவல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கரோனா தீவிரமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் கரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில், உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநில மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என கூறிவருகிறார்.

 

இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தின் ஜஸ்ரானாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராம்கோபால் லோதி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கரோனா பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு மருத்துவமனையில் போதுமான உணவு, தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும், மேலும் தனது மனைவி மூன்று மணி நேரம் தரையில் படுக்கவைக்கப்பட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, "எனது மனைவி முதலில் மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவமனையின் காவலர்களால் திருப்பி அனுப்பப்பட்டார். பிறகு நான் ஆக்ராவின் மாவட்ட மாஜிஸ்திரேட்டை தொடர்புகொண்டேன். அவர் எனது மனைவிக்கு மருத்துவமனையில் அனுமதி வாங்கி தந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை குறித்து தகவல் இல்லை. மருத்துவமனையில் உள்ள யாரையும் என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை" என கூறியுள்ளார்.

 

தற்போதுதான் தான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளதாகவும், தனது உடல்நிலை பலவீனமாக இருப்பதால் ஆக்ராவரை சென்று பார்க்க முடியவில்லை என கூறியுள்ள  எம்.எல்.ஏ ராம்கோபால் லோதி, ஒரு எம்.எல்.ஏ மனைவிக்கே சரியான கவனிப்பு இல்லையென்றால், சாதாரண மக்களுக்கு என்ன நடக்கும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் இந்தக் குற்றசாட்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் அவல நிலையைக் கூறுவதாக அமைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.