Skip to main content

அஜித் பவார் மீது பகீர் குற்றச்சாட்டு; உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பா.ஜ.க?

Published on 29/05/2025 | Edited on 29/05/2025

 

BJP may be contest local body elections alone and Allegations against Ajit Pawar

மகாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரும் துணை முதல்வர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர். 

இந்த  சூழ்நிலையில் சிவசேனா தலைவரும், துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் மீது அதிருப்தி இருப்பதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டதாலும், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக அவருக்கு கருத்து வேறுபாடு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த ஊகங்களை இடமளிக்கும் வகையில், மாநிலம் தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விடுத்த ஒவ்வொரு அழைப்புகளையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஏக்நாத் ஷிண்டே புறக்கணித்து வந்தார். 

ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்த போது, அவர் நியமித்த அதிகாரிகளை தேவேந்திர பட்னாவிஸ் நீக்கினார். அதே போல், ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்த ஜல்னா திட்டம் போன்ற திட்டங்களை தேவேந்திர பட்னாவிஸ் நிறுத்தி வைத்தார். இது ஏக்நாத் ஷிண்டேவுக்கு மேலும் எரிச்சலை கொடுத்தாகக் கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான், தன்னை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தேவேந்திர பட்னாவிஸுக்கு ஏக்நாத் ஷிண்டே சில நாள்களுக்கு முன்பு மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன் பிறகு நடைபெற்ற சமாதானப் பேச்சில் இருவருக்கும் இடையே அமைதி நிலவியது. 

BJP may be contest local body elections alone and Allegations against Ajit Pawar

இந்த நிலையில், அஜித் பவார் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வருகை தந்தார். அப்போது துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் மீது பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதில் 2024 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை எதிர்த்த வேட்பாளர்களை அஜித் பவார் ஆதரிப்பதாகவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் நிலைப்பாட்டை மாற்றவிருப்பதாகவும் பா.ஜ.க தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் பாஜ.க, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மஹாயுதி கூட்டணிக்குல் விரிசல்கள் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊகங்களுக்கு மத்தியில், முக்கியமான மாவட்டங்களில் தனது வாக்காளர் தளத்தை வலுப்படுத்தவும், அந்த இடங்களில் தங்களது ஆதிக்கத்தை மீண்டும் பெறவும் உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க தனித்து போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் அஜித் பவாரும், சரத் பவாரும் மீண்டும் ஒரே அணியில் இணையவிருக்கின்றனர் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்