Advertisment

5 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்; எதிர்க்கட்சிகளிடம் தோற்று மண்ணைக் கவ்விய பா.ஜ.க!

BJP loses 4 places in 5 Assembly constituency by-elections at 4 state

4 மாநிலங்களில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 1 இடத்தை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சிகளிடம் தோற்று பா.ஜ.க மண்ணைக் கவ்வியுள்ளது.

Advertisment

பஞ்சாப் மாநிலம் லூதியான தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குர்பிரீத் சிங் கோகி மறைந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானது. அதே போல், மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் பகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நஸிருதீன் அகமது உயிரிழந்தார். குஜராத் மாநிலத்தின் காடி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ கர்சான்பாய் சோலங்கி உயிரிழந்ததால் அந்த தொகுதி காலியானது. குஜ்ராத் மாநிலத்தில் உள்ள மற்றொரு தொகுதியான விஸாவதர் தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பயானி பூபேந்திரபாய், தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.கவில் இணைந்தார். இதனால், அந்த தொகுதியும் காலியானது. கேரளா மாநிலம் நிலாம்பூர் தொகுதியில் இடதுசாரி ஆதரவுடன் வெற்றி பெற்ற பி.வி.அன்வர், தனது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்தார். இதனால், அந்த தொகுதி காலியானது.

Advertisment

இந்த 4 மாநிலங்களில் உள்ள 5 காலியான சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, அந்தந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த 17ஆம் தேதி முடிவடைந்தது. அதனை தொடர்ந்து, 5 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், 5 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (23-06-25) எண்ணப்பட்டது. கேரளாவில் உள்ள நிலாம்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி வேட்பாளர் எம்.ஸ்வராஜை தோற்கடித்து 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஆர்யாதன் சவுகத் வெற்றிப் பெற்றுள்ளார். அதே போல், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மேற்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஜீவன் குப்தாவை தோற்கடித்து ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா வெற்றிப் பெற்றுள்ளார். குஜராத்தின் விஸாவதர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கிரித் படேலை 75,942 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆம் ஆத்மி வேட்பாளர் கோபால் இத்தாலியா வெற்றிப் பெற்றுள்ளார். குஜராத்தின் மற்றொரு தொகுதியான காடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து பா.ஜ.க வேட்பாளர் ராஜேந்திர சாவ்டா 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அலிபா அகமது 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளார்.

ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும், 5 சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றியிருப்பது அக்கட்சிக்கு சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதில், அடுத்த ஆண்டு2026இல் மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், இரண்டு மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலிலும் பா.ஜ.க மண்ணை கவ்வி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலின் முடிவுகள், வரும் சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ASSEMBLY CONSTITUENCY bypoll by polls
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe