Skip to main content

தமிழகம், கேரளா மாநில பாஜக நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த அமித்ஷா!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

மாநில பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்துகொண்டு நிர்வாகிகளிடையே பேசினார். அப்போது அவர் நாடாளுமன்ற தேர்தலில்பாஜக 303 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. இருந்தாலும், பாஜக தனது வெற்றியின் உச்சத்தை இன்னும் தொடவில்லை. கட்சியின் நிர்வாகிகள் கட்சி பணியை மற்றும் ஆற்றாமல், மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாஜக கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை அமித்ஷா தொடங்கி வைத்தார். உறுப்பினர் சேர்க்கையை கண்காணிக்கும் குழுவின் அமைப்பாளராக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை நியமித்தார்.

 

 

UNION HOME MINISTER AMIT SHAH

 

 

அந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவராக யார் நியமிப்பது குறித்து ஆலோசனை செய்தனர். கூட்டத்தின் முடிவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் டிசம்பர் மாதம் வரை பாஜக கட்சியின் தலைவராக அமித்ஷா நீடிப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கூட்டத்திற்கு  பின்  பாஜக பொதுச்செயலாளர் புபேந்தர் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார்.  பிரதமர் மோடியின் தலைமைக்காகவும், மத்திய அரசின் சிறந்த செயல்பாட்டுக்காகவும், கட்சி ஊழியர்களின் கடும் உழைப்புக்காகவும் இந்த வெற்றி கிடைத்துள்ளது.16 மாநிலங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட ஓட்டுகளை பா.ஜனதா பெற்றுள்ளது. 200 தொகுதிகளில் பா.ஜனதாவின் வெற்றி வித்தியாசம் அதிகமாக உள்ளது. இந்த தேர்தலில் சாதியமும், குடும்ப அரசியலும் வீழ்த்தப்பட்டுள்ளது.

 

 

UNION HOME MINISTER AMIT SHAH

 

 

கடந்த 2014- ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பிறகும்,பாஜக இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை என்று அமித் ஷா கூறினார். இப்போதும் அதையே கூறியுள்ளார். கடந்த 2014- ஆம் ஆண்டுக்கு பிறகு [பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 கோடியாக அதிகரித்தது. இப்போது புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கி உள்ளது. அதே போல் கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில பாஜக நிர்வாகிகள் அனைவரும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியதாகவும், பாஜக அதற்காக புது வியூகத்தை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case related to VVPAT Judgment in the Supreme Court today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்குகிறது. 

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார்.