Skip to main content

‘ராகுலுக்கு அதுதான் பிரச்சனை; அதை அறிந்துகொள்ளாதவரை மோடியைத் தோற்கடிக்க முடியாது’ -பிரசாந்த் கிஷோர்!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

prashant kishor

 

மேற்குவங்கத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ், தனது கிளைகளை பல்வேறு மாநிலங்களில் பலமாக நிறுவ முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கோவா மாநிலத்தையும் திரிணாமூல் குறி வைத்து வருகிறது. இதற்கிடையே திரிணாமூல் காங்கிரஸுக்குத் தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளைச் செய்து வரும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் கோவாவில் மக்கள் மனநிலை குறித்த ஆய்வுகளை தொடங்கியுள்ளது.

 

இந்தநிலையில் கோவாவிற்கு வருகை தந்த பிரசாந்த் கிஷோர், அங்கு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசும்போது, பாஜகவிற்கு எதிராக இன்னும் பல தசாப்தங்களுக்கு போராட வேண்டியிருக்கும் எனவும், மோடியின் வலிமையை அறிந்துகொள்ளாதவரை வரை தோற்கடிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

 

கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது;

 

வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், முதல் 40 வருடங்கள் காங்கிரஸ் இருந்ததைப் போலவே, இந்திய அரசியலின் மையப்புள்ளியாக பாஜக இருக்கப் போகிறது. பாஜக எங்கும் போய்விடாது. இந்திய அளவில் 30% வாக்குகளைப் பெற்றவுடன், நீங்கள் உடனே எங்கும் போய்விடமாட்டீர்கள். எனவே மக்கள் கோபமடைந்து மோடியைத் தூக்கி எறிவார்கள் என்ற வலையில் ஒருபோதும் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஒருவேளை மக்கள் மோடியைத் தூக்கி எறிவார்கள். ஆனால் பாஜக எங்கும் போகாது. அடுத்த பல தசாப்தங்களுக்கு நீங்கள் அதை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்.

 

அங்குதான் ராகுல் காந்திக்குப் பிரச்சனை. மக்கள் அவரை (நரேந்திர மோடி) தூக்கி எறிவார்கள் என்று அவர் நினைக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. அவருடைய (மோடியின்) பலத்தை நீங்கள் ஆராய்ந்து, புரிந்துகொண்டு, அறிந்து கொள்ளாதவரை, அவரைத் தோற்கடிக்க உங்களால் ஒருபோதும் முடியாது. நான் பார்க்கும் பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலானோர் அவரது பலத்தைப் புரிந்துகொள்வதற்கும், அவரை எது பிரபலமாக்குகிறது என்பதை புரிந்துகொள்வதற்கும் போதுமான நேரத்தைச் செலவிடுவதில்லை. அதைத் தெரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் அவரை எதிர்க்க முடியும்.

 

நீங்கள் எந்த காங்கிரஸ் தலைவரிடமோ அல்லது எந்தப் பிராந்தியத் தலைவரிடமோ சென்று பேசுங்கள். இது கொஞ்சக் காலம்தான். மக்கள் கோபமடைகிறார்கள். எதிர்ப்பு அலை ஏற்படும். மக்கள் அவரை தூக்கி எறிவார்கள் எனக் கூறுவார்கள். எனக்கு அதில் சந்தேகம் உள்ளது. நீங்கள் தேர்தல் மட்டத்தில் பார்த்தால், இது மூன்றில் ஒரு பங்கிற்கும் மூன்றில் இரண்டு பங்கிற்கும் இடையிலான சண்டை. மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே பாஜகவுக்கு வாக்களிக்கிறார்கள் அல்லது பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்கள். பிரச்சனை என்னவென்றால், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் 10, 12 அல்லது 15 அரசியல் கட்சிகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள். காங்கிரசின் வீழ்ச்சியும் இதற்கு ஒரு காரணமாகும்.


இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்....

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.