Skip to main content

‘ராகுலுக்கு அதுதான் பிரச்சனை; அதை அறிந்துகொள்ளாதவரை மோடியைத் தோற்கடிக்க முடியாது’ -பிரசாந்த் கிஷோர்!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

prashant kishor

 

மேற்குவங்கத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ், தனது கிளைகளை பல்வேறு மாநிலங்களில் பலமாக நிறுவ முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கோவா மாநிலத்தையும் திரிணாமூல் குறி வைத்து வருகிறது. இதற்கிடையே திரிணாமூல் காங்கிரஸுக்குத் தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளைச் செய்து வரும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் கோவாவில் மக்கள் மனநிலை குறித்த ஆய்வுகளை தொடங்கியுள்ளது.

 

இந்தநிலையில் கோவாவிற்கு வருகை தந்த பிரசாந்த் கிஷோர், அங்கு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசும்போது, பாஜகவிற்கு எதிராக இன்னும் பல தசாப்தங்களுக்கு போராட வேண்டியிருக்கும் எனவும், மோடியின் வலிமையை அறிந்துகொள்ளாதவரை வரை தோற்கடிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

 

கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது;

 

வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், முதல் 40 வருடங்கள் காங்கிரஸ் இருந்ததைப் போலவே, இந்திய அரசியலின் மையப்புள்ளியாக பாஜக இருக்கப் போகிறது. பாஜக எங்கும் போய்விடாது. இந்திய அளவில் 30% வாக்குகளைப் பெற்றவுடன், நீங்கள் உடனே எங்கும் போய்விடமாட்டீர்கள். எனவே மக்கள் கோபமடைந்து மோடியைத் தூக்கி எறிவார்கள் என்ற வலையில் ஒருபோதும் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஒருவேளை மக்கள் மோடியைத் தூக்கி எறிவார்கள். ஆனால் பாஜக எங்கும் போகாது. அடுத்த பல தசாப்தங்களுக்கு நீங்கள் அதை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்.

 

அங்குதான் ராகுல் காந்திக்குப் பிரச்சனை. மக்கள் அவரை (நரேந்திர மோடி) தூக்கி எறிவார்கள் என்று அவர் நினைக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. அவருடைய (மோடியின்) பலத்தை நீங்கள் ஆராய்ந்து, புரிந்துகொண்டு, அறிந்து கொள்ளாதவரை, அவரைத் தோற்கடிக்க உங்களால் ஒருபோதும் முடியாது. நான் பார்க்கும் பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலானோர் அவரது பலத்தைப் புரிந்துகொள்வதற்கும், அவரை எது பிரபலமாக்குகிறது என்பதை புரிந்துகொள்வதற்கும் போதுமான நேரத்தைச் செலவிடுவதில்லை. அதைத் தெரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் அவரை எதிர்க்க முடியும்.

 

நீங்கள் எந்த காங்கிரஸ் தலைவரிடமோ அல்லது எந்தப் பிராந்தியத் தலைவரிடமோ சென்று பேசுங்கள். இது கொஞ்சக் காலம்தான். மக்கள் கோபமடைகிறார்கள். எதிர்ப்பு அலை ஏற்படும். மக்கள் அவரை தூக்கி எறிவார்கள் எனக் கூறுவார்கள். எனக்கு அதில் சந்தேகம் உள்ளது. நீங்கள் தேர்தல் மட்டத்தில் பார்த்தால், இது மூன்றில் ஒரு பங்கிற்கும் மூன்றில் இரண்டு பங்கிற்கும் இடையிலான சண்டை. மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே பாஜகவுக்கு வாக்களிக்கிறார்கள் அல்லது பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்கள். பிரச்சனை என்னவென்றால், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் 10, 12 அல்லது 15 அரசியல் கட்சிகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள். காங்கிரசின் வீழ்ச்சியும் இதற்கு ஒரு காரணமாகும்.


இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்....

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.