BJP criticizes Rahul pays homage to Indira Gandhi by wearing shoes

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது ராகுல் காந்தி காலணி அணிந்திருந்த செயல் அவமானகரமான செயல் என்று பா.ஜ.க விமர்சனம் செய்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக ‘சங்கதன் ஸ்ருஜன் அபியான்’ திட்டத்தைத் தொடங்கி வைக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலுக்கு ஒரு நாள் பயணமாக வந்தார்.

Advertisment

அதற்காக மத்தியப் பிரதேச காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி புகைப்படத்திற்கு, ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் காலணி அணிந்திருந்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பான வீடியோவில், ராகுல் காந்தி நடந்து சென்று காலணிகளை அணிந்தபடியே இந்திரா காந்தியின் பிரேம் செய்யப்பட்ட புகைப்படத்திற்கு பூக்களை தூவி மரியாதை செலுத்துகிறார்.

இதற்கு மத்தியப் பிரதேச பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இது குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது, “அவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர். அவருக்கு இங்கு வர உரிமை இருக்கிறது. ஆனால் தனது பாட்டிக்கு காலணிகளுடன் அஞ்சலி செலுத்துவதா? அது நமது கலாச்சாரத்திற்கு பொருந்தாது. அவர் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.