
மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி ஆகிய சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக மாறியது. இந்த மோதல் போக்கிற்கு நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பொதுமக்கள், பெண்கள், சிறார்கள் என பலர் இந்த வன்முறையில் கொல்லப்பட்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் வன்முறை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், கலவரத்தை தடுக்க தவறியதாகக் கூறி மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டார். அதன் பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைக்கும் முயற்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் 10 பேர், நேற்று (28-05-25) காலை ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நிறுவ வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ நிஷிகாந்த் சபம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு மூன்றரை மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமிருந்தும், ஒரு பிரபலமான அரசாங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற வலுவான விருப்பம் உள்ளது. அதுதான் ஆளுநருடனான எங்கள் சந்திப்பின் முக்கிய நோக்கம். ஜனாதிபதி ஆட்சியின் கீழ் நிர்வாகம் எவ்வாறு வேறுபட்டது என்றும், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை திறம்பட மாற்ற முடியாது என்பதையும் நாங்கள் விவாதித்தோம். மணிப்பூரில் தேசிய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த அனைத்து எம்.எல்.ஏக்களும் இந்த முயற்சியில் ஒன்றுபட்டுள்ளனர், மேலும் மக்களிடம் ஆட்சி திரும்புவதைக் காண மிகவும் ஆர்வமாக உள்ளனர். மக்கள் இல்லாமல், எதுவும் முன்னேற முடியாது. அவர்களின் ஆதரவு, வளர்ச்சிக்கு அவசியமானது” என்று கூறினார். மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைப்பதற்கு 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.