Skip to main content

மாநில அந்தஸ்து போராட்டம்; முறிகிறதா பாஜக அதிமுக கூட்டணி

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

 BJP-AIADMK alliance breaking  in pondicherry

 

புதுச்சேரி மாநில அந்தஸ்து இல்லாததால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்து இருந்தார். முதலமைச்சரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. என்.ஆர்.காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தும் முரண்பட்ட கருத்துகள் எழுந்தன. முதலமைச்சர் ரங்கசாமி மீது குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன. அதேசமயம் 'மாநில அந்தஸ்து என்பது அரசியலுக்காகப் பேசப்படுகிறது' என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் கூறினார்.

 

இத்தகைய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அ.தி.மு.க யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

 

 BJP-AIADMK alliance breaking  in pondicherry

 

அதையடுத்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு காரணமாகத் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஆட்டோக்கள் இயங்கவில்லை. புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பஸ்கள் மட்டுமே இயங்குகின்றன. குறைவான அளவில் பஸ்கள் இயங்குவதாலும், ஆட்டோக்கள் இயக்கம் பாதிப்பாலும் சாலைகள் வெறிச்சோடின. மேலும் நேரு வீதி, காந்தி வீதி, காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு ஒரு சில கடைகள்  காவல்துறை பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தினால் நகரம் மற்றும் கிராமப்புறங்களிலும் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில், புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் புறப்பட்ட அரசுப் பேருந்து முதலியார்பேட்டை காவல் நிலையம் அருகே கல் வீசித் தாக்கப்பட்டது. இதேபோன்று கடலூர் சென்ற தனியார் பேருந்து மரப்பாலம் சந்திப்பில் மர்ம நபர்களால் கல் வீசித் தாக்கப்பட்டது. இதனால் முதலியார்பேட்டை பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. இதேபோல் டெம்போக்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கியதில் 2 டெம்போக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் மாற்று வழி இல்லாததால் சாலையில் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

 BJP-AIADMK alliance breaking  in pondicherry

 

மேலும்  முன்னெச்சரிக்கை காரணமாக அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் அந்தந்த பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புத்தாண்டு, பொங்கல் நெருங்கி வரும் நிலையில் திடீர் பந்த் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கூட்டணியில் உள்ள அ.தி.மு.க அரசுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் முறிவு ஏற்படலாம் என பேசப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.