Skip to main content

"பிரதமர் மோடி கொடுத்தார்னு நினச்சேன்" - வங்கியில் தவறுதலாக செலுத்தப்பட்ட பணத்தை திருப்பியளிக்க மறுக்கும் நபர்!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

narendra modi

 

பீகார் மாநிலம் ககரியா மாவட்டம் பக்தியார்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். இவரது வங்கிக் கணக்கில், கிராம வங்கி தவறுதலாக 5.5 லட்ச ரூபாயைத் செலுத்தியுள்ளது. இவ்வாறு தவறுதலாகச் செலுத்தப்பட்ட பணத்தை ரஞ்சித் தாஸ் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்தும் விட்டார்.

 

இதனையடுத்து சம்மந்தப்பட்ட வங்கி, தொடர்ந்து ரஞ்சித் தாஸுக்கு பணத்தைத் திரும்பச் செலுத்துமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் பணத்தைத் திரும்பிச் செலுத்தவில்லை. இதனையடுத்து அவர் மீது வங்கி காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணம், பிரதமர் மோடியின் வாக்குறுதிப்படி தனது வங்கியில் செலுத்தப்பட்டதாக நினைத்ததாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பணத்தை பெற்றபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பிரதமர் நரேந்திர மோடி அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ15 லட்சம் செலுத்துவதாக உறுதியளித்திருந்ததால், இது அதன் முதல் தவணையாக இருக்கலாம் என்று நினைத்தேன். பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டேன். என்னுடைய வங்கிக் கணக்கில் தற்போது பணமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

 

ரஞ்சித் தாஸிடம் தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் சொன்ன காரணத்தை இணையவாசிகள் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

 ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Incident happened 6 people for Terrible fire at hotel in patna

பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியார் அடுக்குமாடி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலில் இன்று (25-04-24) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் சிக்கினர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பயங்கர தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அங்கு படுகாயமடைந்திருந்த 20க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.