இந்தியாவில் அசாம், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் அசாம் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் முக்கிய ஆறுகளில் ஒன்றான அசாம் மாநிலம் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அந்த மாநிலத்தில் பல மாவட்டங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையினர் கொண்ட குழு அதிக அளவில் அசாம் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஒரு பகுதியில் சாலைகள் மற்றும் தெருக்கள் முழுவதும் வெள்ளம் நீர் சூழ்ந்திருந்தது. அந்த பகுதியில் ஒரு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிவடைந்த நிலையில், அந்த இடம் முற்றிலும் நீரால் சூழ்ந்திருந்ததால் வெளியேற முடியாமல் தவித்த தம்பதிகள், உறவினர்கள் உதவியால் ட்ரம்களால் செய்யப்பட்ட படகில் பயணித்தனர், புதுமண தம்பதிகள். எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் ஆபத்தான முறையில் படகில் பயணிக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.