மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி, ஆண்டுதோறும் செப்டம்பர் 11ஆம் தேதி மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்பன உள்ளிட்ட 14 அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று (11/09/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்விருக்கை அமைக்கப்படும். தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி இருக்கை பயன்படும். பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி பாரதி இருக்கை அமைக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பாரதியாருக்கு புகழாரம் சூட்டினார்.