Skip to main content

"மத்திய அரசின் அறிவுறுத்தலால் தடுப்பூசி தர மறுக்கும் பாரத் பயோடெக்" - டெல்லி அரசு குற்றச்சாட்டு!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021
manish sisodiya

 

கரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், இதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதே ஓரே தீர்வாகக் கருதப்படுகிறது. இதற்காக, மக்களுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மே ஒன்றாம் தேதி முதல் 18 - 44 வயதுள்ளோருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்தும், பல மாநிலங்களில் 18-44 வயதினருக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்படவில்லை.

 

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்தவே போதுமான தடுப்பூசிகள் இல்லாததால், 18-44 வயதினருக்குத் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது அம்மாநில அரசு. அதேபோல, டெல்லியிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம், மத்திய அரசின் உத்தரவால்தான் டெல்லிக்குத் தடுப்பூசிகளை வழங்கவில்லை என டெல்லியின் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

கூடுதல் தடுப்பூசி கோரிய டெல்லி அரசின் கடிதத்திற்கு, பாரத் பயோடெக் எழுதியுள்ள பதில் கடிதத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மனிஷ் சிசோடியா. அவர் பதிவிட்டுள்ள அந்த  கடிதத்தில், "ஒவ்வொரு மாதமும் (தடுப்பூசி) உற்பத்தியை  அதிகரித்து வந்தாலும், எங்களால் தேவைக்கு ஏற்ற அளவு தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி நாங்கள் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கிறோம். எனவே, நீங்கள் கோரியபடி கூடுதல் தடுப்பூசிகளை விநியோகிக்க முடியாததற்காக வருந்துகிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

 

மேலும், இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், "தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசு தவறாக நிர்வகிக்கிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலையும், தயாரிப்பு அளவு குறைவாக இருப்பதையும் காரணம் காட்டி பாரத் பயோடெக் நிறுவனம் டெல்லிக்குத் தடுப்பூசி வழங்க மறுக்கிறது. 6.6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது தவறு என மீண்டும் ஒருமுறை நான் கூறுவேன். தடுப்பூசி வராததால், 17 பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த 100 கோவாக்சின் தடுப்பூசி மையங்களை மூட வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்" எனக்  கூறியுள்ளார் மனிஷ் சிசோடியா.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.