Bangladesh issue; All party meeting in Delhi

வங்கதேசத்தில் ஏற்பட உள்நாட்டுக் கலவரத்தையடுத்து அந்நாட்டுப் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். இத்தகைய சூழலில் தான் போராட்டக்காரர்கள் நேற்று (05.08.2024) பிற்பகல் 03:00 மணியளவில் பிரதமரின் இல்லத்தின் வளாகத்திற்குள் நுழைந்தனர். இதற்கு முன்னதாக பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று மதியம் 02:30 மணியளவில் பங்கபாபனில் இருந்து இராணுவ ஹெலிகாப்டரில் அவரது சகோதரியுடன் அங்கிருந்து தப்பியதாகத் தகவல் வெளியானது. இந்த பரபரப்பான சூழலில் வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

Advertisment

வங்கதேசத்தில் பரவும் கலவரம் காரணமாக இந்திய எல்லையில் கண்காணிப்பு பணிகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய எல்லையில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் வங்கதேசத்தில் ராணுவ கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு உருவாகும் என அந்நாட்டின் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வங்கதேச விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைத்து விடுத்திருந்தது. இதனையடுத்து இன்று (06.08.2024) காலை 10 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த கூட்டத்தில் இந்தியா எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறித்தும், வங்கதேசத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றம், கலவரம் குறித்தும் கூட்டத்தில் விளக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், ஜெ.பி. நட்டா, ஹெச்.டி. குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், திமுக சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.