Ban on paper cups, plastic bags to continue says Supreme Court

Advertisment

பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கபட்டு அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் நீதிமன்றத்தால் இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ரவிந்தர் பட் மற்றும் அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லும் எனவும், பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீது விதிக்கப்பட்ட தடை சரி எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம் பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடையை மத்திய அரசு கொண்டு வந்துள்ள வழிகாட்டுதலின்படி மறு பரிசீலனை செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.