பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை!

babri masjid case lucknow cbi court

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று (30/09/2020) தீர்ப்பு வழங்கியது லக்னோ சி.பி.ஐ. நீதிமன்றம்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992- ஆம் ஆண்டு டிசம்பர் 6- ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்ட 49 பேரில் 17 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரில் 26பேர் லக்னோ சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி. உமாபாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட ஆறு பேர் காணொளி மூலம் ஆஜராகினர்.

இந்த நிலையில் லக்னோ சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சுமார் 2,000- க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்தார். அதில் "குற்றச்சாட்டுகளைப் போதிய ஆதாரங்களுடன் சி.பி.ஐ. நிரூபிக்கவில்லை. எனவே, குற்றஞ்சாட்டப்பட்ட எல்.கே. அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்பட 32 பேரும் விடுதலை செய்யப்படுகின்றன. அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிட்டது அல்ல. பாபர் மசூதியை இடிக்கவிடாமல் தலைவர்கள்தான் தடுக்க முயன்றனர்." என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

28 ஆண்டுகாலம் நீட்டித்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுத்துள்ளது சி.பி.ஐ. நீதிமன்றம்.

இதனிடையே, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாவதன் காரணமாக, லக்னோ சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Ayodhya babri masjid case court judgement lucknow
இதையும் படியுங்கள்
Subscribe