Skip to main content

இந்திய மருத்துவ கூட்டமைப்பிடம் 25 கேள்விகளை எழுப்பிய பாபா ராம்தேவ்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

ramdev

 

பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான  அறிவியல் என்றதோடு, சிகிச்சை, ஆக்சிஜன் உள்ளிட்டவை கிடைக்காமல் இறந்தவர்களைவிட, நவீன மருத்துவ மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் என கூறினார். இது பெரும் சர்ச்சையானது. இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (indian medical association) ராம்தேவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. மேலும், ராம்தேவின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியது.

 

மேலும், இந்திய மருத்துவக் கூட்டமைப்பு, நவீன மருத்தவ முறைகளை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ராம்தேவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நவீன மருத்துவ முறைகள் குறித்த உங்கள் கருத்து துரதிருஷ்டவசமானது என்றும் அதனை திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

 

இதனையடுத்து ராம்தேவ், தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், இந்த சர்ச்சையை நினைத்து வருந்துவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய மருத்துவக் கூட்டமைப்புக்கு கேள்விகளை முன்வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் ராம்தேவ், அலோபதி மருத்துவம் உயர் இரத்த அழுத்தம், டைப் 1 மற்றும் டைப்  2 நீரிழிவு நோயிலிருந்து நிவாரணம் அளிக்கிறதா? தைராய்டு, கீழ்வாதம், பெருங்குடல் அழற்சி, ஆஸ்துமா போன்றவற்றுக்கு நவீன மருந்தியல் துறையில் நிரந்தர சிகிச்சை உள்ளதா? அலோபதியில் கல்லீரல் கொழுப்பு மற்றும் கல்லீரல் சிரோசிஸுக்கு மருந்துகள் இருக்கிறதா? என 25 கேள்விகளை முன்வைத்துள்ளதோடு,  சிக்கன் பாக்ஸுக்கு நீங்கள் சிகிச்சையைக் கண்டறிந்ததைப் போல, கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சையைக் கண்டறியுங்கள். அலோபதி வெறும் 200 வருடங்கள்தான் பழமையானது என்றும் கூறியுள்ளார். ராம்தேவின் இந்தக் கேள்விகளில், அவருக்கும் இந்திய மருத்துவக் கூட்டமைப்புக்கும் இடையேயான மோதல் தொடரும் என கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்