Skip to main content

“அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் கதறி அழுகின்றனர்" - அசோக் கெலாட்

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

ashok gehlot about sachin pilot team mlas

 

சச்சின் பைலட் அடைத்து வைத்துள்ள எம்.எல்.ஏ.க்கள், தங்களைத் தொடர்புகொண்டு கதறி அழுகிறார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் போக்கு 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

 

இதனையடுத்து 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறிய சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக அசோக் கெலாட் கூட்டிய இரு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்களும் கலந்துகொள்ளவில்லை. மேலும், சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் வேறொரு ரிசார்ட்டில் தனியாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்தது.

 

இதனைத்தொடர்ந்து சொகுசு விடுதியில் தங்கியிருந்த சச்சின் பைலட் ஆதரவாளர்கள் ரகசிய வாசல் வழியாக அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சச்சின் பைலட் சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். அவர் அடைத்து வைத்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு தொலைபேசியில் அழைத்து கதறி அழுகிறார்கள். அவர்களின் தனிப்பட்ட மொபைல் போன்களும் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் சுதந்திரமாக நடமாட அவர் அனுமதிக்க வேண்டும். அந்த எம்.எல்.ஏ.க்களில் பலர் எங்களுடன் சேர விரும்புகின்றனர்’’ எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்