Skip to main content

ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ.25 கோடி... பேரம் பேசும் பா.ஜ.க... சொகுசு விடுதியில் 90 எம்.எல்.ஏக்கள்... அசோக் கெலாட் பரபரப்புக் குற்றச்சாட்டு...

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

ashok gehlot about bjp plan in rajasthan


ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. பேரம் பேசி வருவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். 
 


ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்துவரும் சூழலில், மத்தியப்பிரதேசத்தைப் போல ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க. முயன்று வருவதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2018இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா, தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் கட்சியிலிருந்து விலகியதால், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனையடுத்து சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் அம்மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைத்தது. பா.ஜ.க. திட்டமிட்டு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டிவந்த நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா மூலம் ஆட்சியைக் கவிழ்ப்பது குறித்து சிவராஜ் சிங் சவுகான் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 


இந்நிலையில், ராஜஸ்தானிலும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ள அசோக் கெலாட், 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைத் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்கவைத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.25 கோடி பணம் கொடுத்து ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க. தயாராகி வருகிறது. அதற்கு முன்பணமாக ரூ.10 கோடியும், கட்சியில் சேர்ந்த பின் ரூ.15 கோடியும் தருவதாக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு மிகப்பெரிய அளவிலான பணம் வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எங்கள் எம்.எல்.ஏக்கள் மீது நம்பிக்கை வைத்து தற்போது அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம். மத்தியப்பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கைப்பற்றியதுபோல் ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. முயல்கிறது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி இதுகுறித்து ஆலோசிக்க இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.