
சொத்து குவிப்பு வழக்கில் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏவுக்கும், அவரது தந்தைக்கும் 1 ஆண்டு சிறை, 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சொத்தை பறிமுதல் செய்யவும் சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அசோக்ஆனந்த். அவரது தந்தை ஆனந்தன்.
2007-2008 ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக ஆனந்தன் பணியாற்றிய போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐக்கு புகார் சென்றது. அதன் பேரில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் ஆனந்தன் ரூ 3.15 கோடி அளவில் சொத்து குவித்து இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து சி.பி.ஐ ஆனந்தன், அவரது மகன் அசோக்ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை புதுச்சேரி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை இன்று முடிவடைந்தது. அதனை தொடர்ந்து தலைமை நீதிபதி தனபால் அசோக்ஆனந்த் எம்எல்ஏ, அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தார். மேலும் ஆனந்தன் மற்றும் அசோக் ஆனந்த் ஆகிய இருவருக்கும் 1 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ 1 லட்சம் அபராதமும் விதித்தார். அத்துடன் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த 1 கோடி 57 லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்தை பறிமுதல் செய்து வசூலிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
அதையடுத்து இருவரும் ஜாமீனுக்கு விண்ணப்பித்தனர். அதையடுத்து இருவருக்கும் சொத்து ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். அடுத்து தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.