Arvind Kejriwal Bail Case Judgment deferred

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

மேலும் அந்த ஜாமீன் உத்தரவில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாகத் தெரிவித்திருந்தது. அதோடு ஜூன் 2ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். இந்நிலையில் மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோடு மனுத்தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (05.09.2024) விசாரணைக்கு வந்தது.

Arvind Kejriwal Bail Case Judgment deferred

Advertisment

அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிடுகையில், “இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் ஜெஜிரிவாலை தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு சிபிஐ தரப்பில் வாதிடுகையில், “இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிதா, மனிஷ் சிசோடியா ஆகியோர் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் என அணுகிய பிறகே உச்ச நீதிமன்றத்திற்கு வந்தனர். எனவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விதத்தையே எதிர்க்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றால் அதன் பிறகு வாதிட ஒன்றும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் சார்பில், “இந்த வழக்கு தொடர்பாக தற்போது வாதாடுங்கள். ஜாமீன் கோரி எந்த நீதிமன்றத்தை முதலில் அணுக வேண்டும் என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறைவடைந்தது. இதனையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.