Arvind Kejriwal Ajar; Enhanced police security

அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, சிசோடியாவின் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தியானத்தில் ஈடுபட்டார். முன்னதாக தனது தியானம் குறித்து பேசிய அவர், “மக்களுக்கு தரமான கல்வியையும் மருத்துவத்தையும் கொடுக்க நினைத்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் பிரதமரின் செயல் கவலை அளிக்கிறது” என்றார். மேலும், நாட்டின் நலன் குறித்து தான் கவலைப்படுவதாகவும், அதனால் நாட்டின் நலனுக்காக ஹோலி பண்டிகை அன்று தியானம் இருக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.

Advertisment

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று (16/04/2023) அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜர் ஆனார். முன்னதாக டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் அமைந்துள்ள இடம் வரை ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி துணை முதலமைச்சர் கைதினை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் சிபிஐ அம்மன் அனுப்பி இன்று ஆஜர் ஆக சொன்னதால் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என கருதி காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிபிஐ முன்னிலையில் ஆஜராவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவின் உத்தரவுப்படி சிபிஐ செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மதுபான கொள்கை தொடர்பாக எங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் விசாரணை அமைப்புகள் பொய் கூறுவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Advertisment