Skip to main content

20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி..! மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கான அறிவிப்புகள்...

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2020-2021 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல் ஆகிய மூன்று நோக்கங்களின் அடிப்படையில் இந்த பட்ஜெட் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயத்திற்காக 16 அம்சங்கள் கொண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

 

announcements for agriculture in budget 2020

 

 

வேளாண் துறை தொடர்பான மத்திய அரசின் சில முக்கிய அறிவிப்புகள்...

விவசாயத் துறையை மேம்படுத்தும் விதமாக இந்த பட்ஜெட்டில் 16 அம்ச திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் விதமாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்களை அமைக்க, 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல விவசாயிகள் சரியான உரம் மற்றும் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தும் முறை மற்றும் உரங்களின் சீரான பயன்பாட்டை ஊக்குவிக்கவும் உதவும் திட்டங்களை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. 

கிராமங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தான்யலட்சுமி என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்கீழ் விதைகளை சேமித்து விநியோகிக்கும் செயல்பாடுகளில் கிராமப்புற பெண்கள் ஈடுபடுவார்கள். பெண்களுக்கான திட்டங்களுக்காவே 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். விளைபொருட்களைக் கொண்டுசெல்ல தனி ரயில்கள் கிசான் ரயில் என்ற பெயரில் இயக்கப்படவுள்ளன. தேசிய, சர்வதேச விமானப் போக்குவரத்து மூலம், விவசாயப் பொருட்களை கொண்டுசெல்ல, கிருஷி உடான் என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படும். விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி நிதி கடனாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மொத்தமாக விவசாயத் துறைக்கு மட்டும் 2.83 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீர்வளம்:

இனிவரும் நாட்களில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய, நாடு முழுவதும் வீடுகளுக்கு குடிநீர்க் குழாய்கள் மூலம் நீர் வழங்க, ஜல் ஜீவன் என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகமாகிறது. இதற்காக, 3.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மேலும், நீர் வளத்திற்கென 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.