ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு பின்பு, அம்மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார். இதற்கு பலவேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.
எதிர்ப்புகள் போராட்டமாக மாறி அமராவதி விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அண்மையில் போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் தாக்கியதாகவும், கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என முடிவெடுத்த அப்பகுதி மக்கள், கடையடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தனர். மேலும், போராட்டத்தின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு குடிக்க தண்ணீர் கூட அளிக்கக்கூடாது என மக்கள் தீர்மானித்தனர். இந்த கடையடைப்பு போராட்டமானது சாலை மறியல் போராட்டமாகவும் மாறியது.
போராட்டம் வலுப்பெற தொடங்கிய நிலையில், பேச்சுவார்த்தைக்கு வந்த டி.எஸ்.பி அவர்களை கலைந்துபோக சொன்னார். அப்போது அங்கிருந்த மக்கள், அவரது காலில் விழுந்து போக முடியாது என மறுத்தனர். இதனையடுத்து டி.எஸ்.பி-யும் பதிலுக்கு பொதுமக்கள் காலில் விழுந்து மக்களை கலைந்துபோக சொன்னார். சீருடையில் இருந்த டி.எஸ்.பி பொதுமக்கள் காலில் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.