ஆந்திர பிரதேச மாநிலம் இரண்டாக பிரிந்த பின்னர், ஆந்திராவின் தலைநகராக அமராவதியை தேர்வு செய்துள்ளனர். தற்போது அந்த தலைநகரில் உலகிலேயே மிக உயரிய சிலையாக இருக்கும் படேல் சிலையை விட உயரமான சட்டசபை கட்டிடத்தை கட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளனர்.

Advertisment

குஜராத்தில் 182 மீட்டரில் படேல் சிலை திறக்கப்பட்டவுடன் அதற்கு போட்டியாக பல மாநிலங்களில் பல உயரிய சிலைகளை நிறுவ அந்த அந்த மாநில அரசாங்கள் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அமராவதியில் 250 மீட்டர் உயரத்தில் சட்டசபை கட்டிடம் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த உயரமான சட்டசபை கட்டிடத்தின் மாதிரி வடிவத்தில் சிறு திருத்தங்களை செய்து, 2 நாட்களில் சந்திரபாபு நாயுடு இறுதி செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட உள்ள இந்த சட்டசபை கட்டிடத்தில் 2 மாடங்கள் அமைக்கப்பட உள்ளது. 80 மீட்டர் உயர்த்தில் உள்ள முதல் மாடம் 300 பேர் வரை அமரக்கூடிய வசதி கொண்டதாகவும், 2வது மாடம் 250 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட உள்ளது. 20 பேர் அமரக்கூடிய வசதி கொண்ட இந்த 2வது மாடத்தில் இருந்து அமராவதி நகர் முழுவதையும் பார்க்க முடியும்.2வது மாடம் முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட உள்ளதாகவும், இங்கு செல்ல லிப்ட் வசதியும் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. புயல், நிலநடுக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இந்த சட்டசபை கட்டிடம் அமைக்கப்பட்டால் நாட்டில் மிக உயரமான கட்டிடமாக இது கருதப்படும். நவம்பர் மாத இறுதியில் இந்த சட்டசபை கட்டிடம் கட்ட டெண்டர் கோரப்பட உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த கட்டிட பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளது. உயரமான சட்டசபை கட்டிடம் மட்டுமின்றி தலைமை செயலகத்திற்காக 5 கட்டிட மாதிரிகளையும் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்து வைத்துள்ளாராம்.