ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்கமாக ஜெகன்மோகன் ரெட்டி பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் செல்லும் சாலையில் சில இளைஞர்கள் பதாகைகளுடன் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த ஜெகன் உடனடியாக காரை நிறுத்துமாறு ஓட்டுனருக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு காரில் இருந்து இறங்கி இளைஞர்களை சந்தித்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இளைஞர்களை சந்தித்து, என்ன பிரச்சனை என்று கேட்டார்.

Advertisment

jagan mohan raddy

அதற்கு இளைஞர்கள் தங்களது நண்பரான நீராஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவரின் குடும்பம் வறுமையில் உள்ளதால் சிகிச்சை முடியாத சூழல் நீராஜ்க்கு ஏற்பட்டுள்ளதால் மாநில அரசு சார்பில் நீராஜ்க்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரை உடனடியாக அழைத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நீராஜ் என்பவருக்கு மாநில அரசு சார்பில் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனை உதவிகளையும் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். பின்பு இளைஞர்கள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜெகன் அங்கிருந்து சென்றார்.