
தொழிற்சாலைகளில் பெண்கள் இரவுப் பணிகளில் (Night shift) ஈடுபட அனுமதிக்கும் சட்ட மசோதாவிற்கு ஆந்திரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜன சேனா - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை நேற்று (04-06-25) கூடியது. அப்போது, 1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்து பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய தொழிற்சாலகளில் பெண்கள் இரவுப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து ஆந்திரப் பிரதேச மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கொலுசு பார்த்தசாரதி தெரிவித்ததாவது, “தொழில்கள் மீதான நடைமுறைச் சுமைகளைக் குறைக்க ஆந்திரப் பிரதேச தொழிற்சாலைகள் திருத்த மசோதா, 2025 சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும். இதன் மூலம் போதுமான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுடன் பெண்கள் இரவுப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். இந்த மசோதாவின் படி, பெண் ஊழியர்கள் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை இரவுப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அவர்களை அழைத்துச் சென்று இறக்கிவிடும் போதுமான போக்குவரத்து வசதி மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஊழியர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்ற பின்னரே, இது பொருந்தும்.
தற்போது தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் 50-75 மணி நேரம் மட்டுமே கூடுதல் நேர வேலை செய்ய உரிமை உண்டு. இப்போது, தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பெண் ஊழியர்கள் 144 மணி நேர கூடுதலாக வேலை செய்ய முடியும்” என்று கூறினார்.