பொதுத் தேர்வுக்காக 106 கி.மீ தனது மகனை சைக்கிளில் அழைத்து சென்ற தந்தை ஒருவரின் செயல் இணையத்தில் வைரலான நிலையில், அந்த சிறுவனின் எதிர்கால கல்வி செலவுகளை மஹிந்திரா அறக்கட்டளை ஏற்கும் என ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தை சேர்ந்த தினக்கூலி தொழிலாளி சோபாராம். இவரது மகன் அசீஸின் பொதுத்தேர்வு மையம், சொந்த ஊரிலிருந்து 106 கி.மீ. தொலைவில் ஒதுக்கப்பட்டது. ஆனால், ஊரடங்கால் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், தன்னிடம் இருந்த சைக்கிளில் தனது மகனை அமரவைத்து 106 கிலோமீட்டர் தூரம் பயணித்து தேர்வு மையத்தை அடைந்தார்.
இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில், அந்த சிறுவனின் கல்விக்கு உதவுவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். இதுகுறித்தஅவரது ட்விட்டர் பதிவில், "ஒரு தைரியமிக்க பெற்றோர் தன் குழந்தைகளுக்காக பெரிய கனவுகளைக் காண்பவர். இதுதான் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு எரிபொருளாக இருக்கும். எங்களுடைய அறக்கட்டளை அசீஸின் அடுத்தகட்ட கல்விக்கு உதவும்" எனத் தெரிவித்துள்ளார்.