Skip to main content

"இந்தியாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறையா..?" சர்ச்சையாகும் அமித்ஷாவின் கருத்து...

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகமுறை தோல்வியடைந்துள்ளதோ என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

amitshah speech about multi party democracy

 

 

நேற்று டெல்லியில் பேசிய அமித்ஷா, "முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, தினந்தோறும் செய்தித் தாள்களில் ஊழல் குறித்த செய்திகள் தான் இடம்பெற்றன. இந்திய எல்லைகள் பாதுகாப்பில்லாமல் இருந்தன. பெண்கள் பாதுகாப்பில்லா உணர்வுடன் இருந்தனர். ஒவ்வொரு நாளும் மக்கள் சாலைகளில் போராட்டம் நடத்தினர். மேலும் இதனை ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் எந்தஒரு முக்கியமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. ஆனால் பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி, பண மதிப்பு நீக்கம், துல்லியத் தாக்குதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

பல்வேறு நாடுகளில் உள்ள ஜனநாயக முறைகளை ஆய்வு செய்து பல கட்சி ஜனநாயக முறையை கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கியது. ஆனால் இந்திரைய நிலையில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகமுறை தோல்வியடைந்துள்ளதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்கள் அவநம்பிக்கையடைந்தால், நம்முடைய இலக்கை எப்படி எட்ட முடியும்?" என கூறினார்.

இந்திய அரசியலமைப்பின் முக்கிய சாராம்சமான பல கட்சி ஆட்சிமுறையை குறைகூறும் விதமான அவரது பேச்சை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் ஒற்றையாட்சி ஆட்சி முறை கொண்டுவரும் திட்டம் ஏதேனும் மத்திய அரசிடம் உள்ளதா எனவும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுந்து வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.