
இந்தி திணிப்புக்கு எதிராகவும், இருமொழி கொள்கையிலும் தனது உறுதியான நிலைப்பாட்டைத் தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியது. தமிழ்நாட்டை தொடர்ந்து, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது.
மொழி தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், ஆங்கிலம் பேசுபவர்கள் கூடிய விரைவில் அவமானப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய ‘மெயின் பூந்த் ஸ்வயம் குத் சாகர் ஹூன்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா தலைநகர் டெல்லியில் நேற்று (19-06-25) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்த நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் கூடிய விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூக சூழல் உருவாகும் நாள் வெகு தூரம் இல்லை. உறுதியானவர்களால் மட்டுமே இந்த மாற்றத்தை கொண்டு வர முடியும். நமது நாட்டின் மொழிகள், நமது கலாச்சாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன். நமது மொழிகள் இல்லையென்றால், நாம் முழுமையான இந்தியர்களும் இல்லை. அந்நிய மொழிகளுடன் இந்திய மொழியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
இந்தியாவின் நாகரீகத்தையும், ஆன்மீகத்தின் வேர்களையும் வெளிநாட்டு மொழிகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. அரைகுறையான வெளிநாட்டு மொழிகளால், முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்த போர் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்தியச் சமூகம் இதில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், சுயமரியாதையுடன் நமது சொந்த மொழிகளால் நாம் நமது நாட்டையும் வழி நடத்துவோம், இந்த உலகத்தையும் வழி நடத்துவோம். இதில் யாரும் சந்தேகப்படத் தேவையில்லை” என்று கூறினார்.