Skip to main content

அப்பாவி மக்களை பாதுகாப்புப் படை கொன்றது ஏன்? - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்!

Published on 06/12/2021 | Edited on 08/12/2021

 

AMIT SHAH

 

நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை (04.12.2021) இரவு, தீவிரவாதிகள் என நினைத்து அப்பாவி இளைஞர்கள் மீது பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில், ஒரு பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அதே நேரத்தில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவாகரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி விளக்கம் கேட்டு அமளியில் ஈடுபட்டனர். 

 

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து மக்களவையில் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓட்டிங்கில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து ராணுவத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கமாண்டோக்கள் சந்தேகத்திற்கிடமான பகுதியில் பதுங்கியிருந்தனர். அப்போது அங்கு ஒரு வாகனம் வந்தது. அதனை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டது ஆனால் அது தப்பிச் செல்ல முயன்றது. இதனால் அது தீவிரவாதிகளை ஏற்றிச் சென்ற வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.


காரில் பயணம் செய்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் தவறாக (தீவிரவாதிகள்) அடையாளம் காணப்பட்டது பின்னர் கண்டறியப்பட்டது. காயமடைந்த மேலும் 2 பேரை ராணுவத்தினர் அருகில் உள்ள சுகாதார மையத்திற்குக் கொண்டு சென்றனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், உள்ளூர் கிராம மக்கள் ராணுவப் பிரிவைச் சுற்றி வளைத்து, 2 வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர் இதன் விளைவாக, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். மேலும் பல வீரர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து தற்காப்புக்காகவும் கூட்டத்தைக் கலைக்கவும் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது. இதனால் மேலும் 7 பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயன்றனர்.

 

இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. தற்போது போலீசார் இந்த சம்பவத்தை விசாரித்து வருகின்றனர். சிறப்பு விசாரணை குழு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கும். . இராணுவம் தனியாக அறிக்கை அளித்துள்ளது.  அதில் அவர்கள் பொதுமக்களின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்கள் நேற்றைய நாள் முழுவதும் நிலைமையை மிக உயர்ந்த மட்டத்தில் கண்காணித்தோம். தொடர்ச்சியான நிகழ்வுகளை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. உயிரிழப்புக்கு மத்திய அரசு மிகவும் வருந்துகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, டிசம்பர் 5 மாலை, சுமார் 250 பேர் கொண்ட ஆத்திரமான கூட்டம், மோன் நகரில் உள்ள அசாம் ரைபிள்ஸின் செயல்பாட்டுத் தளத்தை சேதப்படுத்தி கட்டிடத்திற்கு தீ வைத்தது. கூட்டத்தை கலைக்க அசாம் ரைபிள்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது. இதனால் மேலும் ஒரு குடிமகன் உயிரிழந்தார்.

 

பாதிக்கப்பட்ட பகுதியில், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து இராணுவம் உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரை தொடர்பு கொண்டேன். மத்திய உள்துறை அமைச்சகம் தலைமைச் செயலாளரையும் டிஜிபியையும் தொடர்பு கொண்டது. மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக வடகிழக்கு பகுதிக்கு பொறுப்பு வகிக்கும் கூடுதல் செயலாளரை கோஹிமாவுக்கு அனுப்பியது. அங்கு அவர் இன்று தலைமைச் செயலாளர், பிற மூத்த அதிகாரிகள் மற்றும் துணை ராணுவப் படைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். நிலைமை விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

 

இவ்வாறான  நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை அனைத்து படைகளும் உறுதி செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அரசு நுணுக்கமாக கண்காணித்து வருகிறது மற்றும் அப்பகுதியில் அமைதியை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

 

இதனிடையே அமித் ஷாவின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.