Advertisment

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் அரசு முறை பயணமாக, நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அதனை தொடர்ந்து நேற்றிரவு (21/9/2019) ஹூஸ்டன் சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து ஹுஸ்டன் நகரில் நடைபெற்ற எரிசக்தி துறையின் சிஇஓக்கள் கூட்டத்திலும், எண்ணெய் நிறுவன முதன்மை செயல் தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்றார். இதில் அமெரிக்காவை சேர்ந்த 16 முக்கிய நிறுவனங்கள் பங்கேற்றன. பின்னர் சீக்கிய சமூகத்தினர் மற்றும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை சந்திக்கும் ' ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட்டாக பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் அமெரிக்க எம்பிக்கள் உடன் பிரதமர் மோடி தனியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன் பிறகு 27- ஆம் தேதி ஐநா சபையில் உரையாற்றும் பிரதமர், பின் ஏழு நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறார்.