amar dubey passed away in a police encounter

தேடப்பட்டு வரும் குற்றவாளியான விகாஸ் தூபேவின் உதவியாளரான அமர் தூபே இன்று காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலத்தில், கொலை, கொள்ளை என 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த விகாஸ் தூபே என்ற ரவுடியைக்கடந்த வாரம் போலீஸார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு போலீஸார் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விகாஸ் தூபேவைப் பிடிக்க 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அவரை பற்றி தகவல் கொடுப்போருக்கு சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹமிர்பூர் மாவட்டத்தின் மவுதாஹா கிராமத்தில் சிறப்பு அதிரடிப்படை நடத்திய தேடுதல் வேட்டையில் விகாஸ் தூபேவின் உதவியாளர் அமர் தூபே சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அமர் தூபே இருக்கும் இடத்தைப் பற்றித் தெரிவிப்பவர்களுக்கு ரூ.25,000 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மவுதாஹா எனும் கிராமத்தில் அமர் தூபே பதுங்கி இருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, இன்று அதிகாலை உ.பி. போலீஸாரின் சிறப்பு அதிரடிப்படை மவுதாஹா கிராமத்துக்குள் நுழைந்து அமர் தூபேயைக் கைது செய்ய முயன்றனர். ஆனால், அமர் தூபே போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் அமர் தூபே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பிரேம் பிரகாஷ் பண்டே, அதுல் தூபே ஆகிய இரு ரவுடிகள் கடந்த வெள்ளிக்கிழமை அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.