கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கபினி மற்றும் கே.எஸ்.ஆர். அணைகளிலும் காவிரி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இருப்பினும் தமிழகத்திற்குத் தேவையான நீரை பங்கிட்டுக் கொடுப்பதில் தாமதமே நீடிக்கிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கோவில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த முன்னாள் பிரதமரும், தற்போது கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தை இரு மாநில முதல்வர்களும் கலந்துபேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், ‘தமிழகத்தில் இருக்கும் விவசாயிகளும் எங்களுக்கு சகோதரர்களைப் போன்றவர்கள்தான். இங்குள்ளவர்கள் அணையின் நீர்மட்டத்தை எப்போது வேண்டுமானாலும் பார்வையிட வரலாம். சில நாட்களாக கர்நாடகத்தில் மழை கொட்டித்தீர்ப்பதால், தமிழகத்திற்கு வழங்கவேண்டிய பங்கைவிட இரண்டு மடங்கு தண்ணீர் காவிரியில் ஓடுகிறது’ எனவும் தெரிவித்துள்ளார்.