பிரதமர் மோடி நான்கு நாள் பயணமாக நேற்று (22.09.2021) அமெரிக்கா புறப்பட்டுள்ளார். 'குவாட்' எனப்படும் நான்கு நாடுகள் (அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா) கொண்ட அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க இருக்கும் மோடி, அதற்கு முன்பாக புதிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை சந்திக்க இருக்கிறார். வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப் படைத்தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்க அரசு உயரதிகாரிகளும் இந்திய தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர். அதேபோல் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரும் விமான நிலையத்தில் மோடியை வரவேற்று ஆரவாரம் செய்தனர்.
நடக்க இருக்கும் குவாட் மாநாட்டில் இந்தோ பசிபிக் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் சீனா, பாகிஸ்தான் நிலைப்பாடு ஆகியவை குறித்து மோடி பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இன்று (23.09.2021) அமெரிக்க தொழில் நிறுவனங்களின் தலைவர்களை மோடி சந்திக்க இருக்கிறார். ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக், ஜப்பான் பிரதமர் யோஷிண்டே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரையும் சந்திக்க உள்ளார் மோடி.
இந்நிலையில், விமானப் பயணத்தின்போது கோப்புகளைப் பார்வையிடும் புகைப்படம் ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி ''ஒரு நீண்ட விமானப் பயணம் என்பது அலுவல் சார்ந்த சில கோப்புகளை சரி பார்ப்பதற்கான வாய்ப்புகளையும் தருகிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.