Skip to main content

ஆத்திரமடைந்த மருத்துவ சங்கத்தின் 'பகீர்' அழைப்பு - நாடு முழுவதும் அவசர மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு!

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

delhi doctors

 

நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவதில் வருமான உச்சவரம்பாக 8 லட்சத்தை நிர்ணயித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினரின் குடும்ப வருமானம் 8 லட்சமாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்தால் 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர முடியாது. அதேபோல் ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய மருத்துவ படிப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது அவ்வப்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தசூழலில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அகில இந்திய கோட்டாவில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில் தாங்கள் தீர்ப்பளிக்கும் வரையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நிறுத்திவைப்பதாக உத்தரவாதம் அளிக்க மத்திய அரசை அறிவுறுத்தினர். இதனையடுத்து, மத்திய அரசும் அவ்வாறே உத்தரவாதம் அளித்தது.

 

அதேநேரத்தில் இதற்கு இளம் மருத்துவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன்தொடர்ச்சியாக டெல்லி மருத்துவர்கள் கடந்த நவம்பர் மாதம் போராட்டத்தை தொடங்கினர். ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்து அவசர சிகிச்சை பிரிவு பணிகளையும் மருத்துவர்கள் புறக்கணிக்க தொடங்கினார். பின்னர் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தங்களது போராட்டத்தை ஒருவாரத்திற்கு நிறுத்தினர். இருப்பினும்  முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாததால், கடந்த 17 ஆம் தேதியிலிருந்து ரெசிடென்ட் மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இந்தநிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தை பேரணி செல்ல முயன்ற ரெசிடென்ட் மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த மருத்துவர்களை காவல்துறையினர் தடுத்து சிலரை கைது செய்தனர். மேலும் டெல்லி போலீஸார், தங்கள் மீது தடியடி நடத்தியதாகவும் ரெசிடென்ட் மருத்துவர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவர்களும், அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு மருத்துவர்களும் ரெசிடென்ட் மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் போராட்டத்தில் கலந்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர்.

 

இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், கவுன்சிலிங்கை விரைவுபடுத்துவதற்கான அரசின் திட்டங்கள் என்ன என்பதையும் அறிக்கை வெளியிட வேண்டிய நேரம் இது. 24 மணி நேரத்திற்குள் அரசாங்கத்திடம் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை என்றால், எய்ம்ஸ் ரெசிடென்ட் மருத்துவர்கள் கூட்டமைப்பு நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடும். இதில் அத்தியாவசிய சேவைகள் நிறுத்தப்படும் என எச்சரித்துள்ளது. ஏற்கனவே மருத்துவர்கள் போராட்டத்தால் பல மருத்துவமனைகளில் அவசரகால சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மருத்துவமனைகளில் உள்ளவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டால், டெல்லியில் மருத்துவ சேவைகள் மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதேபோல் அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு, ரெசிடென்ட் மருத்துவர்கள் மீது டெல்லி போலீஸார் தடியடி நடத்தியதை கண்டித்து, நாளை முதல் தங்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெசிடென்ட் மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களை நாளை முதல் அவசரகால சேவை உட்பட அனைத்து சுகாதார சேவைகளிலிருந்தும் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

இந்தசூழலில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தேச நலனை கருத்தில் கொண்டு ரெசிடென்ட் மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், கலந்தாய்வை நடத்த முடியவில்லை என்றும், ஜனவரி 6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர இருப்பதாகவும், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என நம்புவதாகவும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'என்னாது எண்ணி முடிக்க இவ்வளவு நாள் ஆகுமா?' -நீதிமன்றம் சொன்ன பதில்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி வருடத்திற்கு கொண்டு வந்த பொழுது, அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்படுகிறது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

nn

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், 'இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 என்ற தொகுதிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது' என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

Next Story

உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Ramdev apologized publicly to the Supreme Court!

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.