
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் செல்ல முற்பட்டது. அப்போது இந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 5வது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. அதாவது விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் இருந்த நிலையில் இதுவரை 170 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய உயிரிழந்தவர்களில் உடல்களில் பெரும்பாலானவை கருகிய நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு இந்த விமான விபத்து நடந்த இடத்திற்கு சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார்.இந்நிலையில் அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் ஏ.என்.ஐ. ( ANI) செய்தி நிறுவனத்திடம் தொலைபேசியில் பேசுகையில், “விமானத்தின் 11 ஏ இருக்கையில் ஒருவர் உயிர் பிழைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மருத்துவமனையில் உயிர் பிழைத்திருந்த நிலையில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் சிகிச்சையில் உள்ளார். விமான விபத்தின் போது ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. விபத்துக்குள்ளான விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக முன்னாள் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “இந்த விபத்து மிகவும் வருத்தமாகவும் துரதிர்ஷ்டவசமாகவும் இருக்கிறது. ஆனால் நான் ஒரு நிபுணர் அல்ல. விபத்துக்கான காரணம் என்னவென்று சொல்வது மிகவும் கடினமாக இருக்கும். உரிய விசாரணைக்குப் பிறகுதான் காரணம் குறித்து தெளிவாகத் தெரியும். இது ஒரு 787 ட்ரீம்லைனர் விமானம் ஆகும். இது மிகவும் திறமையான விமானமாகக் கருதப்படுகிறது. இந்த விமனாம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிறகு 12 முதல்14 மணி நேரம் வரை எளிதாகப் பறக்க முடியும். அந்த விமானம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்தது. எனவே விமானத்தில் 80 முதல் 90 டன் வரை எரிபொருள் இருக்க வேண்டும். விபத்துக்கான காரணம் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் விசாரணைக்குப் பிறகுதான் அது குறித்து தெளிவாகத் தெரியும். இது மிகவும் சோகமானது மற்றும் அசாதாரணமான விபத்து ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.