Skip to main content

“கொரோனாவில் பாதிக்கப்பட்ட போட்டித் தேர்வர்களுக்கு வயது வரம்பு தளர்வு வேண்டும்” - கனிமொழி எம்பி வலியுறுத்தல்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

“Age limit should be relaxed for competitive candidates affected by Corona” - Kanimozhi speech in Lok Sabha

 

கொரோனா ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மத்திய அரசின் போட்டித் தேர்வர்களுக்கு வயது வரம்பினைத் தளர்த்த வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்பி கனிமொழி பேசியுள்ளார்.

 

மக்களவையின் நேரத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி பேசியதாவது.. "மத்திய அரசு நடத்தும் குடிமைப்பணித் தேர்வான யூபிஎஸ்சி, எஸ்எஸ்சி, மற்றும் வங்கி ஆகிய போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் முறைப்படி கோரிக்கை மனுக்களை அனுப்பியும் அவற்றை கவனித்து அவர்களுக்கு உதவவில்லை . 

 

குறிப்பாக, மாணவர்கள் கூடுதல் நெருக்கடிகளை சந்தித்தார்கள். அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியானது. பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழு, ‘ஊரடங்கால் வாய்ப்பை இழந்த மத்திய அரசின் தேர்வெழுதும் இளைஞர்களுக்கு கருணை அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகளைக் கொண்டு வரவேண்டும். கூடுதலாக ஒரு முறை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால் அரசு அதை நிராகரித்துவிட்டது.

 

இந்த அவையில் தெரிவித்த பதிலில் அதுபற்றி பரிசீலனையிலேயே இல்லை என்று அரசு தெரிவித்துவிட்டது. இத்தகைய போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஒரு வருடத்துக்கு ஒரு மாணவருக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகிறது. குறிப்பாக இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இத்தகைய தேர்வுகளுக்கு தயாராவதற்கு தம் குடும்பச் சூழலால் செலவுகள் அதிகம்.

 

ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு ஊரடங்கால் தேர்வு எழுதும் வாய்ப்புகளை இழப்பது என்பது அவர்களின் வாழ்க்கையில் பெரும் பிரச்சினையாகி விடுகிறது. ஊரடங்கு காரணமாக தேர்வு எழுதும் உரிமை வயது வரம்பின் பெயரில் பறிக்கப்படக்கூடாது. எனவே, அம்மாணவர்களுக்கு வயது வரம்பை தளர்த்தி தேர்வு எழுத வாய்ப்பளிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசினார்.

 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து பேச UPSC COVID-19 Extra Attempt Movement சார்பாக சிலம்பரசன் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது...

 

கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். பல பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மருத்துவர்கள் போன்ற முன்னணி பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அனுதாப அடிப்படையில் கூடுதல் முயற்சியை வழங்குமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனாலும் இன்னும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இந்த வருட ஜூலை மாதத்தில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போட்டித் தேர்வர்கள் அங்கே கூடினார்கள். அவர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் நேரடியாகவே பாதிக்கப்பட்ட கோயம்புத்தூரைச் சேர்ந்த செண்பகம் என்ற போட்டித் தேர்வர் கொரோனா ஊரடங்கு காலத்தில் கொரோனா தாக்கப்பட்டு நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி அதனால் கருவுற்றிருந்த இரட்டைக் குழந்தைகளும் இறந்துபோன சூழ்நிலையில் போட்டித் தேர்வினை எழுத முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இன்னும் ஒரு முறை போட்டித்தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

 

மத்திய அரசு இவர்களது கோரிக்கையை ஏற்று வயது வரம்பினைத் தளர்த்தி மீண்டும் ஒரு முறை போட்டித் தேர்வுகளை எழுதும் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்பதே இந்தியாவெங்கும் இருக்கும் குடிமைப்பணித் தேர்வு எழுதுபவர்களின் கோரிக்கையாக உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

'திமுக ஆட்சிபோல் மத்தியிலும் வரவேண்டும்' - தீவிர பரப்புரையில் கனிமொழி

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'DMK must come to the center as a government' - Kanimozhi in intense lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, அங்குள்ள பசுவந்தனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''பெரும்பான்மையான இந்து மக்களை ஏமாற்றி நாங்கள் தான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம் என்று சொல்கிறார்களே தவிர, அந்த மக்களுக்கு வேலை கூட கிடைப்பதில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். போய் கேட்டால் பக்கோடா போடுங்க அதுவும் வேலை தான் என்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எல்லா மக்களையும் அரவணைத்து நடக்கக்கூடிய ஆட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதே போன்ற ஒரு ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி என்ற ஒன்றுதான் இந்த நாட்டின் மக்களை பாதுகாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதுகாக்கக் கூடிய ஆட்சியை நாம் அங்கே உருவாக்க வேண்டும். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய். அதேபோல பெட்ரோல் 75 ரூபாய்க்கு வழங்கப்படும். அதேபோல் டீசல் 65 ரூபாய்க்கு வழங்கப்படும். விவசாயக் கடன்,கல்விக் கடன் ரத்து செய்யப்படும். டோல்கேட் எல்லாம் அகற்றப்படும். இதெல்லாம் நம்முடைய முதலமைச்சர் தந்திருக்கும் வாக்குறுதி. இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ஓட்டு போட வேண்டும். வெயிலாக இருக்கிறது என வீட்டில் உட்கார்ந்து இருக்கக் கூடாது. நம்முடைய ஜனநாயக கடமையாக ஓட்டு போட வேண்டும். அதேபோல் தூத்துக்குடியில் உங்களுக்காக மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்''என்றார்.