ADVERTISEMENT

3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு; பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்

04:41 PM Mar 05, 2024 | mathi23

கர்நாடகா மாநிலம், மங்களூர் பகுதியில் கடாபா என்ற அரசுக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், நேற்று பியூசி என அழைக்கப்படும் கர்நாடகா மாநில பல்கலைக்கழகத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.

ADVERTISEMENT

அப்போது, கல்லூரி வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். அதன் பின்னர் அவர், யாரும் எதிர்பாராத நிலையில் அங்கிருந்த மாணவிகள் மீது திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை வீசியுள்ளார். இந்த கொடூரச் சம்பவத்தில் அலினா, அர்ச்சனா மற்றும் அமிர்தா ஆகிய 3 மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் மூவரும் அலறித் துடித்ததைக் கண்ட அங்கிருந்த மற்ற மாணவர்கள், படுகாயமடைந்த மாணவிகளை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

இதனிடையே, மாணவிகள் மீது ஆசிட் வீசி தப்பிச் சென்ற இளைஞரை கல்லூரி பணியாளர்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆசிட் வீசிய நபரின் பெயர் அபின் (28) என்பதும், அவர் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், ஆசிட் வீச்சு சம்பவத்தில் காயமடைந்த அலினாவும், அபினும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாணவிகள் 3 பேர் மீது, இளைஞர் ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT