Skip to main content

கோல்மால் செய்த ’ஏபிவிபி மாணவ தலைவர்’.... சான்றிதழில் திருவள்ளுவர் பெயரே தவறு...  

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

 

abvp


ஏபிவிபி என்னும் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பு டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவ தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை தட்டிச்சென்றுள்ளது. தலைவர் பதவிக்காக ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட அன்கிவ் பைசொயாவின் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு வந்து நிருபனம் ஆகியுள்ளது.
 

அதாவது, பைசொயா தமிழகத்திலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியை முடித்ததாக சான்றிதழ்கள் கொடுத்துள்ளார். ஆனால், இவரோ திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்று தற்போது பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
 

இளங்கலை கல்வி கற்காமலேயே, பொய்யான சான்றிதழ்களை கொடுத்து டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பிற்கு சேர்ந்த்திருப்பது தெரியவந்துள்ளது. அன்கிவ் கொடுத்த சான்றிதழில் திருவள்ளுவர் என்னும் பெயரே தவறாக அச்சிடப்பட்டுள்ளது. சரியான பாட பெயர்கள் அதில் இடம் பெறவில்லை. இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக மாணவ தேர்தலில் வெற்றிபெற்ற அன்கிவ் பைசொயா தெரிவித்ததாவது, இது காங்கிரஸ் மாணவ அமைப்பின் சதி என்று கூறியுள்ளார்.
 

கடந்த வாரத்தில் இதேபோன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்தலில் ஐக்கிய இடதுசாரி அமைப்பு பலத்த வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.    

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மாணவர் மீது ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல்; முதல்வர் கண்டனம்

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Attack on Tamil Nadu student at Mumbai IIT; Condemned by the Chief Minister

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் நேற்று (19.02.2023) சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் பயன்படுத்தும் பொதுவான அறையில் இந்நிகழ்ச்சி நடந்ததாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் இடதுசாரி அமைப்பினைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில் ஆவணப்படம் திரையிட இருந்துள்ளனர். 

 

நிகழ்ச்சி முடிந்த பின்னும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அறையை விட்டு வெளியேறாததால் ஆவணப்படத்தை திரையிட வந்த மாணவர்கள் அவர்களை அறையில் இருந்து வெளியேறக் கூறியுள்ளனர். இதன் காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏபிவிபி அமைப்பினர் அந்த அறையில் இருந்த தலைவர்களின் படங்களை அடித்து உடைத்ததாகவும், இதனைத் தட்டிக்கேட்ட தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு உண்டானது. மேலும், பெரியார் படத்தை ஏ.பி.வி.பி.யினர் சேதப்படுத்தியதாகவும் தகவல் வெளியானது.

 

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான இடம் மட்டுமல்ல. கருத்து வேறுபாடுகள், விவாதங்களுக்கான இடமும் கூட. டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர் உள்ளிட்ட மாணவர்களை கோழைத்தனமாகத் தாக்கி பெரியார், மார்க்ஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்களை சூறையாடிய ஏ.பி.வி.பி. அமைப்பினரின் செயல் கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களது உரிமைக்காகவும், ஒன்றிய பா.ஜ.க.வுக்கு எதிராகவும் போராடும் மாணவர்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை டெல்லி காவல்துறையும், ஜே.என்.யு. பல்கலைக்கழகக் காவலர்களும் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை திரையிட முயன்ற மாணவர்கள்;கலவரக் காடான டெல்லி பல்கலை 

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

nn

 

டெல்லி பல்கலைக்கழகத்தில் தடை செய்யப்பட்ட பிபிசி-யின் ஆவணப் படத்தை மாணவர்கள் திரையிட முயன்ற நிலையில் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் ஆவணப்படம் ஒன்று தயாரித்து வெளியிட்டு இருந்தது. இந்த ஆவணப் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் தடை செய்யப்பட்ட பிபிசி-யின் ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட முயன்றனர். உடனடியாக அங்கு சென்ற டெல்லி காவல்துறையினர் ஆவணப்படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அங்கிருந்து மாணவர்களை களைய  முற்பட்டனர். மாணவர்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்காக அந்த பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி குவிந்த மாணவர்கள் ஆவணப்படத்தை திரையிட முயன்ற போது, காவல் துறையினருக்கும் மாணவர்கள் தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக உருவெடுத்தது. அதனையடுத்து மாணவர்கள் குண்டு கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே கலவர காடாக காட்சியளித்தது.