சங்கீத் நிகழ்ச்சிலேயே இவ்வளவு விருந்தினர்கள், உதய்பூரிலுள்ள விமான நிலையத்தில் பல விமானங்கள் போக்குவரத்தாகி வந்தது கண்டிப்பாக திருமணத்தில் மேலும் பலர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்கையில், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். உலகில் இருக்கும் பிரமாண்ட வீடுகளில் ஒன்றான முகேஷ் அம்பானியின் 27 மாடி ஆண்டிலியா வீட்டில் இந்த திருமணம் நடைபெற்றது. இதனால் அந்த தெரு முழுவதும் மலர்களாலும், வண்னவிளக்குகளாலும், மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சங்கீத் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட பல நட்சத்திரங்களும், டிசம்பர் 12ஆம் தேதி நடந்த திருமண விழாவிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த திருமணம் பாலிவுட் நட்சத்திரங்களால் மட்டும் நிறையாமல் இந்திய அரசியல் தலைவர்கள், இந்தியாவின் நேஷனல் லெவல் விளையாட்டு வீரர்கள், உலக தொழிலதிபர்கள் ஆகியோரால் நிறைந்திருந்தது. கலந்துகொண்டதில் குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள் என்று பார்த்தால் பிரனாப் முகர்ஜி, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, ஜிகே வாசன் என்று உள்நாட்டு அரசியல்வாதிகளும் வெளிநாட்டில் இருந்து ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜான் கெரி வெளிநாட்டு அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர். ஆனால், முகேஷ் அம்பானிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்பட்ட அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை.
டிசம்பர் 12ஆம் தேதி நடந்த இந்த திருமணத்தின் விளைவால் மும்பை விமான நிலையத்தில் 1007 விமானங்கள் வந்து சென்றுள்ளது. திருமணம் நடைபெற்ற அடுத்த நாளில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை புரிபவர்களை மட்டும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதற்கு ஆஸ்கர் நாயகனை இசை கச்சேரியும் வைக்கப்பட்டது. தற்போது இந்த திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. ஆனால், இந்த திருமணத்தால் எழுந்த சர்ச்சைகளுக்கு ஓயவில்லை. பாலிவுட்டின் கிங் கான்கள் என்று சொல்லப்படும் சல்மான் கான், ஷாரூக் கான் ஆகியோர் மேடைகளில் நடன கலைஞர்களை போல் நடனம் ஆடியது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கான்கள் மட்டும் இல்லை, உலக அழகி ஐஸ்வர்யா ராய் அபிஷேக்குடன்மேடைகளில் நடனம் ஆடியிருந்தது. இதுபோல பல்வேறு பிரபலங்கள் நடனம் ஆடியது பெரும்பாலான மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இறுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்ற அன்றிரவு, அமிதாப் பச்சன், அமீர் கான், ஷாரூக் கான் ஆகியோர் அந்த திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளுக்காக உணவு பரிமாறிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதை பார்த்த பலர் மேலும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள். பலர் இதற்கு தங்களின் கருத்தை தெரிவிக்க, அமிதாப்பின் மகனான அபிஷேக் இந்த விமர்சனங்களுக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்திருக்கிறார். ட்விட்டரில் பிரபலங்கள் பரிமாறியது குறித்து தெரிவித்த அபிஷேக், “பாரம்பரியத்தில் சஜ்ஜன் கோத் என்று சொல்வார்கள். அதாவது மணப்பெண் குடும்பத்தினர் மாப்பிள்ளை குடும்பத்திற்கு விருந்து பரிமாறுவது” என்பதாகும் என்றார்.