Skip to main content

குஜராத் தேர்தலில் காங்கிரசை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் ஆம் ஆத்மி

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 
- தெ.சு.கவுதமன்

 

BJP

 

குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில்  நடைபெற உள்ளதால், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளன. இம்முறை அங்கே பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

காங்கிரஸ் தரப்பில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், ராகுல் காந்தி இங்கு பிரச்சாரம் செய்வதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் நடைப் பயணத்தில் மட்டுமே தீவிர கவனத்தில் இருப்பது காங்கிரஸ் தொண்டர்களின் உற்சாகத்தைக் குறைத்துள்ளது. ஆம் ஆத்மி தரப்பில் கெஜ்ரிவால் தீவிரப் பிரச்சாரத்தில் உள்ளார்.

 

BJP

 

குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு இந்தத் தேர்தல் சவாலானதாக இருக்குமா என்று பார்த்தால், அதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. கடந்த சில தேர்தல்களில் பா.ஜ.க.வா? காங்கிரஸா? என்றிருந்த களத்தில் இம்முறை ஆம் ஆத்மி பெரும் நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் 77 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. பா.ஜ.க. 49% வாக்குகளையும், காங்கிரஸ் 41% வாக்குகளையும் பெற்றிருந்தது.

 

கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடைந்திருக்கிறது. அதேவேளை ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் காங்கிரஸை வாஸ் அவுட் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. எனவே ஆம் ஆத்மி கட்சி மீதான நம்பிக்கை, தற்போது குஜராத் வாக்காளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ் என்ற நிலை மாறி, தற்போது பா.ஜ.க.வுக்கு மாற்றுக் கட்சியாக ஆம் ஆத்மி வளர்ச்சியடைந்து வருகிறது. இது காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியைத்தான் பெருமளவு பாதிக்கிறது.

 

BJP

 

கொள்கை ரீதியாகப் பார்க்கும்போதும், பா.ஜ.க. தன்னை இந்துத்துவா கட்சியாகக் காட்டிக்கொள்வதுபோல் ஆம் ஆத்மியும் தன்னை இந்துத்துவா கட்சியாகத்தான் முன்னிறுத்துகிறது. அதேவேளை, பண மதிப்பிழப்பு, பொருளாதாரச்சரிவு, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது போன்றவற்றால் பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பும் வாக்காளர்களை மொத்தமாக ஆம் ஆத்மி அறுவடை செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் புதிதாக வாக்களிக்கும் இளைஞர்களின் நம்பிக்கையையும் ஆம் ஆத்மி பெற்று வருகிறது.

 

குஜராத்தில் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்கள் தொகை 20% என்ற அளவில் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 40% ஆக உள்ளது. இவர்களைக் குறிவைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளார். பா.ஜ.க.வின் ஜி.எஸ்.டி. கொள்கைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை கெஜ்ரிவால் வைத்து வருகிறார். கடந்த 27 ஆண்டுகளாக இம்மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி செய்தும், இன்னும் மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காத கிராமங்கள் அதிகமிருப்பதாகக் குற்றம்சாட்டி வருகிறார். டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக 800 கோடி ரூபாய்க்கு விலை பேசியதையும் சுட்டிக்காட்டிப் பேசி வருகிறார். அவரது பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

BJP

 

பா.ஜ.க.வோ தனது பிரச்சாரத்தில் ஆம் ஆத்மியைவிட காங்கிரசைத்தான் வழக்கம்போல் டார்கெட் செய்து வருகிறது. இப்படியான சூழலில், பா.ஜ.க.வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியில் 20% அளவுக்கு ஆம் ஆத்மி பாதிப்பை ஏற்படுத்துமென்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கே அதிக சாதகமாக இருக்கும் என்பதால் இரு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், முதல் கட்டத்தில் பா.ஜ.க.வை எதிர்க்கும் ஆம் ஆத்மி, இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியிலும் சேதத்தை அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இன்றைய சூழலில் ஆம் ஆத்மி எந்த அளவுக்கு வாக்குகளைப் பிரிக்கப்போகிறது. எந்தெந்த கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே குஜராத் தேர்தல் முடிவுகள் இருக்குமென்று தெரிகிறது. குஜராத் தேர்தல் முடிவில் காங்கிரசை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆம் ஆத்மி இரண்டாமிடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக, ஆம் ஆத்மியால் காங்கிரசுக்குத்தான் பெரிய ஆப்பு என்பது உறுதியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.